
*நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன ஐகோர்ட் மகாராஜா* (நன...
*நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன ஐகோர்ட் மகாராஜா* (நன்றி:திருக்கோவில் தரிசனம் குழுமம்) *ஆறுமுகமங்கலம், உள்ள தூத்துக்குடி மாவட்டம்* தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது ஆறுமுகமங்கலம். இங்கு வீற்றிருக்கும் சுடலைமாடன் ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகமங்கலம் கோயில் சுமார் ஆறு தலைமுறைக்கு முன்னால் உருவானதாக கூறப்படுகிறது. ஒரு நாள் அப்பகுதியை சேர்ந்த மந்திரம் நாடார், பனை மரத்தின் மேல் இருந்து பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது பனை மரத்தின் கீழே நின்ற வயது முதிர்ந்த ஒருவர், ‘‘ஏம்பா, மந்திரம் நல்ல தாகமா இருக்கு, குடிக்க பதநீர் இறக்கி கொண்டாப்பா’’ என்றார். அதற்கு மந்திரம் நாடார் சொன்னார், ‘‘ஐயா, பெரியவரே இன்னும் பதப்படலையே’’ என்று. ‘‘நீ, இறக்கி கீழே கொண்டு வந்து பாரு, பதப்பட்டிருக்கும், கலயமும் நிறைஞ்சிருக்கும்’’ என்றார். அதன்படியே மந்திரம் நாடார் கலயத்தை இறக்கி கொண்டு வந்தார். பால் பொங்குவது போல பொங்கி வழிந்தது. முகத்தில் சந்தோஷத்தை நிரப்பிய மந்திரம் நாடார், அந்த முதியவரை பார்த்தார். இரண்டு நபராக அந்த முதியவர் நின்றார். மீண்டும் ஒருவராய் ஆன அந்த முதியவர் பதநீர் கேட்க ‘‘ஐயா, நீங்க யாரென்று தெரியவில்லை, எப்படி இது நடந்ததென்றும் புரியவில்லை’’ என்றார். ‘‘சரிப்பா, பனை ஓலையில பட்டை பிடிச்சு, பதநீர் விட்டு கொடு’’ என்று கேட்டார். மந்திரம் நாடார் அதன்படியே கொடுத்தார். கலயத்திலிருந்த பதநீர் முழுவதையும் அவர் அருந்தி விட்டார். அருந்தி முடித்து நிமிர்ந்தார். மந்திரம் நாடார் முகத்தில் சோகம். முதியவர், மந்திரம் நாடாரின் தோளை தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். அன்று இரவு தூக்கத்தின் போது அவர் கனவில் அதே ரூபத்தில் வந்த சுடலைமாடன். தன்னை யாரென்று கூறி, ‘‘உன் பனை விளை இருக்கும் இடத்தின் தென் கிழக்கு பக்கம் அரச மரம் நிற்கும் இடமருகே எனக்கு மண்ணால் பீடம் அமைத்து கோயில் கட்டி வழிபட்டு வா, உன் வாழ்வை வளமாக்குவேன். என் பெயரை சொல்லி, நீயோ, உன் வாரிசுகளோ திருநீறு கொடுத்தால் அதை பெறுபவர் நலம் பெறுவார். கேட்டது கிடைக்கும். என்னை நம்பி கை தொழும் அடியவர்களுக்கு எனதருள் எப்போதும் உண்டு என்ற சுடலைமாடன், நீ என்ன சாப்பிடுவாயோ, அதை படையலாக வைத்தால் போதும். எனக்காக நீ சிரமப்பட வேண்டாம். படையல் வைக்கும் போது, பதநீரையும் சேர்த்து வை. மேலும் நானிருக்கும் இடம் அருகே நான் சொல்கிற நபர்களுக்கும் சேர்த்து 21 பீடம் அமைத்து வழிபடு’’ என்று கூறினார். அதன்படியே மந்திரம் நாடார் தனது உடன்பிறந்தவர்களிடம் பேசி பீடங்கள் அமைத்து வழிபட்டு வந்தார். இரண்டு சுடலை மாடன் பீடம் இருந்ததால் இரட்டை சுடலை மாடசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. கோயிலில் சுண்ணாம்பு மண்ணால் பீடம் அமைத்து, பனை ஓலையால் கூரை அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் கோயிலுக்கு வழிபாடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. நேர்ச்சை செலுத்துவோர்கள் அதிகமாக வரலாயினர். மந்திரம் நாடார் நல்ல முறையில் பூஜை, வழிபாடுகளை செய்து வந்தார். கோயில் நல்ல வளர்ச்சியை பெற்றது. ஓலைக் கூரை, ஓட்டு கூரையானது. பக்தர்கள் சுவாமியிடம் முறையிட்டு, நேர்ச்சை வேண்டி, தொழில் செய்து வந்தனர். விளைச்சலில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன். விளைச்சல் அமோகமாக இருக்கட்டும் என்று அவரை ஒரு பங்குதாரர் போல எண்ணியே நேர்ச்சை செலுத்தி வந்தனர். மூலவர் இரட்டை சுடலைமாடன் இருக்கும் பகுதி மட்டும் ஓடுகளால் வேயப்பட்டது. மற்ற பீடங்கள் வெட்ட வெளியில் இருந்தது. மந்திரம் நாடாருக்கு பின் அவரது மகன் மாசானமுத்து நாடார் பூஜை செய்து வந்தார். ஒருநாள் கோயிலில் மாசானமுத்துநாடார் இருந்து கொண்டிருந்த போது, கோயில் வழியாக அந்த ஊரைச்சேர்ந்த ஒருவர் பசு மாடு ஒன்றை ஓட்டிச் சென்றார். மாசானமுத்துநாடார் அவரிடம் “மாட்ட எங்க கொண்டு போற, என்று கேட்க, அவர், திருச்செந்தூர் ஆறுமுகனுக்கு பால் அபிஷேம் செய்ய, நேர்ந்து விட்ட பால் மாடு இது. கொண்டு போய் விட போறேன் என்றார். ‘‘இங்க வாப்பா, திருநீறு வாங்கிட்டு போ, சுடலை துணைக்கு வருவாரு’’ என்றார். ‘‘முருகன் கோயிலுக்கு போறவனை பேய் கோயிலுக்கு கூப்பிடுறியப்பா, சரி வாரேன் ‘‘என்ற பேசியபடியே மாடுடன் அவர் கோயிலுக்கு வந்தார். கோயிலில் அரச மரத்தின் முன்னே மாட்டை கட்டிப் போட்டார். கோயிலுக்கு வந்த அவர், சுடலை மாடனை மட்டமாகப் பேசினார். அதைக்கேட்ட பூசாரி மாசானமுத்து நாடார், முருகனைப்போன்று எங்க அப்பன் சுடலையும் சிவனுக்கு மகன்தான் என்றார். அந்த நேரம் அரசமரத்தின் முன்னே முருகப் பெருமான், ஆறுமுகத்துடன் காட்சி கொடுத்தார். சில நொடிகளில் அக்காட்சி மாறி, அசரீரி கேட்டது. கோயிலில் பேதமை கூடாது என்பதற்காகவே காட்சி கொடுத்தேன். உன் பயணத்திற்கு துணையாய் சுடலைமாடன் வருவார். அவரைக் கைதொழுது வா, செந்தூர் வந்து கொடிமரம் முன்னே சிதறு தேங்காய் உடைத்து விட்டுவா என்றது. ஆறுமுகத்துடன் முருகப்பெருமான் காட்சியளித்ததால் அன்று முதல் இவ்வூர் ஆறுமுகமங்கலம் என அழைக்கப்படலாயிற்று. கோயில் இருக்கும் இடம் கணபதி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது. வேம்படி மாடனாக எழுந்தருளல்: ஏரலை சேர்ந்த தெய்வத் தடியாபிள்ளை நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார். ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வருகிறார். இரட்டை சுடலைமாடசுவாமி கோயில் தாண்டி வரும்போது ஒரு மூட்டை மாயமாகி விட்டது. இது வெள்ளிக்கிழமை தோறும் நடந்தது. மாதம் ஒன்றாகியும் காரணம் தெரியாமல் தவித்தார் தெய்வத்தடியாபிள்ளை. அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய சுடலைமாடன். உனது வண்டியிலிருந்து நெல் மூட்டையை நான் தான் எடுத்தேன் என்றும் எனது எல்லைக்குள் தொழில் செய்யும் நீ, என்னை கவனிக்கவில்லை என்று கூறியுள்ளார். அப்போது தெய்வத்தடியாபிள்ளை நான் முருகனுக்கு அடிமைப்பட்டவன். சைவம். உனக்கு பலி கொடுத்து பூச பண்ண என்னால முடியாது. உன் இருப்பிடம் தேடி வந்து நெல் கொடுக்கவும் முடியலையே எனக்கூறினார். உடனே சுடலைமாடன் அடுத்துவரும் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை என் கோட்டையிலிருந்து எட்டாவது விளங்காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும் பனைமரங்களுக்கு இடையே ஒற்றையாய் நிற்கும் வேப்பமரத்தின் கீழ் புற்றாய் வளர்ந்து நிப்பேன். அவ்விடத்தில் எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா. உன்னையும் உன் சந்ததியினரையும் வளமோடு வாழ வைப்பேன். என் பேரை சொல்லி வரும் பக்தர்களுக்கு வேறுபாடு பாராமல் திருநீறு கொடுத்து அனுப்பு. அவர்களிடம் எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்கிறேன். பூஜை செய்யும் பணிவிடையை நீ செய்தால் போதும் என்றுரைத்தார். சுடலைமாடன் சொன்னபடியே பனங்காட்டுக்குள் வேப்பமரத்தின் அடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. தெய்வத்தடியா பிள்ளை கோயிலை நிர்வகித்து பூஜை செய்து வந்தார். வேப்பமரத்தின் அடியில் தோன்றியதாலே இங்கிருக்கும் சுடலைமாடன் வேம்படி மாடன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயில் கீழகோயில் என்று அழைக்கப்படுகிறது. மண் பீடமாக சுவாமி இருக்கிறார். மூலவர் இருக்கும் இடம் பனை ஓலையால் வேயப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தில் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் சுடலை மாடனின் உத்தரவிற்கிணங்க கொடை விழா நடத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர். அதாவது கொடை விழா நடத்தும் பொருட்டு, ஆடிமாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும் போது, பல்லி சத்தம் எழுப்பினால் அதை சுடலை ஆண்டவனின் உத்தரவாக ஏற்று கொடை நடத்த முடிவு செய்கின்றனர். பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால் குறிக்கப்பட்ட நாள், மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை. நாள், மாதம் மாறி கூட அந்த உத்தரவு வந்த பின்தான் கொடை நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். சுடலைமாடனே பல்லி ரூபம் கொண்டு உத்தரவு கொடுப்பதாக நம்புகின்றனர். சிவ சிவ🙏
Keywords
Subscribe for latest offers & updates
We hate spam too.
